Skip to main content

Posts

ஏதிலியின் நள்ளிரவு கட்டாந்தரையில் புரள்கிறது

தனித்தலைதலின் பானத்தை நான்காவது மிடறு அருந்துகையில் குதிகாலுயரும் ஆழ் முத்தத்தில் நான் நின் சொற்களுக்குள் ஆவியாகிக் கரைந்து போகிறது. அறவே ஈரம் தீர்ந்து சிறு வலியோடு ஒட்டி ஒட்டி விலகும் இறந்த காலத்தின் மடிந்த உதட்டிதழ் என் சொற்களுக்குள்  எச்சில் தேடி வருகிறது. நானென்பது அரபு மெல்லினங்களாலான விடலை அழகியின் கழுத்தோரம் சுரக்கும் ஈரமான முத்தம் இக்கணம். அழகியின் கைக்கிளைக் கனவில் பின்னே பதுங்கிவந்து அணைக்கும் வளைந்த காற்றென இருள் என்னைச் செய்கிறது. இருள் என்பது ஈரம் எனப் பொருள் மாறும் வரை காத்திருந்த ஹூ மெல்ல இறங்கி வந்து ஆண்டாண்டுக்குமாக என்னை அணைத்துக்கொண்டது. பாதித் தூரம் விழுந்திருந்த இலைகளும் திரும்ப மரக்கிளைகளில் போய் ஒட்டி இளமையாகிக்கொண்டன வெட்கத்தில். இனிப் பனி விழும் #ஹூவில் கலத்தலின் இன்பம்.

தலைவர் வாழ்ந்த கவிதை

சாகாவரம் பெற்ற மூன்றே மூன்று சொற்களைப் பிடித்துக்கொண்டு தலைவர் வாழ்ந்த கவிதைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன். அவரின் சொற்கள் முழுதும் ஞானிகள் வாழ் இருப்பிடத்து இருள் கவிந்து போயிருக்கிறது பிந்தைய நாட்களில் சிம்மாசனத்துக்கெனப் பயன்பட்ட நான்களின் பலிபீடம், மனச்சாட்சிகளின் இரத்தக்கறை தோய்ந்த அழுக்குத் துணிகளால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது “யாருமே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாத பாழ் சூழ் இல்லம் அது” என்பதை மட்டும் குறிப்பெடுத்துக் கொள்கிறேன். தலைவர் தேயத் தேயப் பயன்படுத்திய ‘அல்லாஹு அக்பர்’ ‘போராளிகளே புறப்படுங்கள்’ ‘மரம்’ ஆகிய அம்மூன்று சொற்களும் ஒட்டடை படிந்த ஜன்னல்களில்  சாகாவரம் பெற்ற வௌவால்களாகி த்  தலைகீழாகத் தொங்குகின்றன. (பி. கு:  தலைவரின் வௌவால்களுக்கு வாய் மட்டுமே உண்டு) இன்னொரு கவிதையின் சொற்கள் சிலவற்றிலிருந்து அங்கே சிம்மாசனத்தின் மீது புதிதாக இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பது என்னைக் கிலி கொள்ளச் செய்கிறது. எனக்கு உடனே போகவேண்டும். வௌவால்களோ என்னைச் சிறகுகளால் அழுத்திப் பிடித்துக்கொண்டன. மூன்றில் ஒரு வௌவால் சொன்னது “தவறு தவறாக பிளேடினால் குஞ்சாமணி அறுக்க...