Skip to main content

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்



கவிதை - 01

தொக்கி நிற்கவென இடப்படும் 
மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து
முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன

தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக் 
கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால் 
என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா

என் மார்பின் பூனை ரோமங்கள் மொத்தமும்
பாம்பு போல அதனோடு ஒட்டிப் பிணைந்து கொள்கின்றன

பிறகு வழக்கம் போல 
அவளை அதே பெயரறியாத நாணமெனவும்
நான் என்பதை பின்னாலிருந்து அணைக்கும் 
ராட்சதக் காற்றெனவும் 
இரவு பெயரிட்டுக் கொள்கிறது

மூன்று வெவ்வேறு நிறைவுற்ற புள்ளிகள் 
அர்த்தங்களை முடிவிலியென அறிவிக்கும் அபத்தமே
கவிதையெனச் சொல்லி விடுவதினின்றும் 
தலைமயிரின் சுகம் இனிது

நானெனப்படுவது கவிதை;
கவிதையெனப்படுவது உண்மையை மறைப்பது
பின் 
அதில் சுகிப்பது.

இரவின் முடிவில் 
ஒரு பூ வளையமெனத் தன்னை சுற்றியிருக்கச் செய்து
சத்தமாகப் பாட்டிசைக்கிறது நான்

தூய அர்த்தமாகிய யசோதரா
என் இசையில் மெல்லக் கரைந்து 
காற்றெங்கும் அத்தர் போல மணக்கிறாள்


கவிதை - 02

முத்தங்களின்றி வரண்ட காடொன்றினை 
வரைந்து முடித்த வேளை 
தீர்ந்து போன உஷ்ணத்துக்கான நிறங்களை
தன் சிவந்த உதடு கொண்டு 
வரைந்து வைக்கிறாள் யசோதரா

ஓவியத்தில் புத்தமும் துறவும் சூழ்ந்திருந்த 
காடும் மலைகளும் தீப்பற்றி எரிகின்றன

வெறுமையாக விடப்பட்ட இறுதித்தாளின் அமைதியென  
அர்த்தங்கள் துண்டு துண்டாகச் சிதறுகின்றன அப்போது

சொற்களைப்போல அவை எரிந்தெல்லாம் தீர்வதில்லை

கோபம் தீராத யசோதராவின் இடது கழுத்து மடிப்பில் 
ஒரு நதியினளவு இடைவெளியை 
ஒரு ஒற்றைத் தலைமுடி வரைகிறது.

நான் என்பது இனி 
தன்னை நீந்திக்கடக்கும் நதியே தானெனச் சொன்னபடி
முடிவிலி அர்த்தங்களின் மூன்று புள்ளிகளாக விழுகிறது 
கவிதைக்குள்ளிருந்து திடீரெனச் சிறகடித்த 
ஒரு புதுச் சொல்.

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்...