Skip to main content

யசோதரா!!!


கோபத்தில் தூக்கியெறியப்பட்ட இரண்டாவது வார்த்தை யசோதராவுடையது.

(அது எவ்வாறெனில்...)

கத்தரிக்கப்பட்ட இமைகளுக்குள்ளிருந்து கசிந்த புத்தபிரானின் மோகம் பட்டே
யசோதராவென்னும் ஓவியம் அசையத்தொடங்குகிறது.

(அதனால்)

பாதி உலர்ந்த கூந்தலில் சிந்தும் நீர்த்துளி பட்டு விரைக்கிறது ஞானத்தின் குறி.

(அதிலிருந்து)

நம்மைப் பிரித்து வைத்திருக்கிற மூன்றாவது வெசக் நிலவை நீ சபிக்கிறாய்,

தைக்கப்படாத துணியால் போர்த்தப்பட்ட என் துறவைச் சபிக்கிறாய்,

ஆடைகளெதுவுமற்ற முதல்வார்த்தையின் தூய நிர்வாணத்தைச் சபிக்கிறாய்,
ஒரு வண்டு போல இரைந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதன் நீண்ட குறியைச் சபிக்கிறாய்,

விலக்கப்பட்ட கனியையுண்டதும், தூக்கியெறியப்பட்டதுமான இரண்டு சொற்களும்
பிறகு பூமியின் மீது பிணைந்தபடி கிடந்ததைச் சபிக்கிறாய்,

உன்னை நான் அணைத்தபடியிருந்த ஆற்றோரம்
ஒரு குப்பி விளக்குச் சுடருக்குள் தொலைந்து போன
புத்தபிரானின் விரகத் துளிகளைச் சபிக்கிறாய், 

(இத்தனைக்கும்)

யசோதராவாகிய நின் விழியோரம் தேன் போல கசிந்துறைந்திருப்பது என்னுடைய பரிநிர்வாணத்தின் ஒளி.

யசோதரா!
நானென்பது உறையும் கழிவு.
நீயென்பது இடது விலா எலும்பில் சுரக்கும் தேன்.

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்...

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...