Skip to main content

பசியெனப்படும் பெருஞ்சொல்


01. இருட்சுவரின் மீதெழுதப்பட்ட 
பசியெனப்படும் பெருஞ்சொல்லின் மீதேறி 
இந்த நள்ளிரவு  தன் தெருப் பாடலை இசைக்கத் தொடங்குகிறது

நடனமாடலாம்

சத்தமாக ஒரு தோற்கருவியை இசைக்கலாம்

ஒரு சருகிலையைச் சுருட்டிப் புகைக்கலாம்

ஒரு காதல் கவிதையின் கீழுதட்டை மென்றபடி காற்றில் மிதக்கலாம்

என 

தனக்கெனத் தெரிந்தெடுக்கவென பசியின் பரவசம் 
எதையுமே  விட்டு சென்றிருக்கவில்லையென ஏங்கி 
தன் மேனி முழுக்க சாம்பல் நிறத்தைத் தீட்டிக் கொண்டது இரவு

02. பசியெனப்படும் பெருஞ்சொல்லை 
அதே நிறங்களால் மீளவும் தன் மீது எழுதத் துவங்குகிறது நான்

அப்போது 
புத்தக அடுக்கினுள் புழுதி படிந்திருந்த குட்டிப் புத்தரின் மேல் 
பாதி நிலவின் ஒளியெனப் படர்கிறது பசி

பழம்புத்தக மடிப்புகளுக்குள் பசி ஒரு 
பழுத்த மஞ்சள் நிறத்தின் வாசமென வீசுகிறது

கடந்து செல்ல முடியாத கவிதைக்குள்ளோ 
பசி தன்னையோர் மறுகாலால் உணரப்பட்ட 
இன்னொரு நதியின் கதகதப்பெனக் குறித்து வைக்கிறது

பசியெனப்படும் பெருஞ்சொல் தனக்கு இனி ஒளியாகும் என்கிறது நான்

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

கடல்

©Fatheek Aboobucker வலது தோளில் வந்தமர்ந்தபடி   ஒவ்வொரு முகமாகக் கொத்தி   மணல் மீது ஒன்றின் மேல் ஒன்றாக   அடுக்கத் துவங்குகிறது   மிச்சமிருந்த பின்பகல்   அல்லது   திசைமாறிப் பறந்து வந்த கடல் காகம் சுவடுகளை விட்டுப் போதல் பற்றி   கடல் ஏன் ஒரு துயர் கவிதைதானும் எழுதுவதில்லை ? நினைவுகளின் பாரத்தில்   அவிழ்ந்து விழும் கோடி நான்களையும் கடல் என்னதான் செய்யும் ? முத்தத்தின் துவர்ப்பெனப் பிசுபிசுக்கும்   உப்புச் சொல்லொன்று கொண்டு   ஒரு துண்டுக் கடவுள் படைக்குமா ? அதற்கு   காதலின் தொடுவான நிறங்கரைத்து   ஆடை தீட்டுமா ? அதனிடம் கேட்கப்பட்டேயிராத வரமாகிய   எழுதவே எழுதப்படா இரண்டாம் கவிதையான அதை சுருட்டி மடித்து மென்று தின்னத் தர வேண்டி   மன்றாடுமா ? எதுவுமில்லா உன்மத்தம் கடல் கடலெனப்படுவது   காதலியின் ஆழ்மௌனம் நான் தோற்பது தெரிந்தும் விளையாடும்   விடலைத் தோழி அதில்   நீட்...

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...