Skip to main content

தலைவர் வாழ்ந்த கவிதை

சாகாவரம் பெற்ற மூன்றே மூன்று சொற்களைப் பிடித்துக்கொண்டு
தலைவர் வாழ்ந்த கவிதைக்குள் தட்டுத்தடுமாறி நுழைகிறேன்.
அவரின் சொற்கள் முழுதும் ஞானிகள் வாழ் இருப்பிடத்து இருள் கவிந்து போயிருக்கிறது
பிந்தைய நாட்களில் சிம்மாசனத்துக்கெனப் பயன்பட்ட நான்களின் பலிபீடம்,
மனச்சாட்சிகளின் இரத்தக்கறை தோய்ந்த அழுக்குத் துணிகளால் மூடி வைக்கப்பட்டிருக்கிறது
“யாருமே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாத பாழ் சூழ் இல்லம் அது” என்பதை மட்டும் குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.

தலைவர் தேயத் தேயப் பயன்படுத்திய
‘அல்லாஹு அக்பர்’
‘போராளிகளே புறப்படுங்கள்’
‘மரம்’ ஆகிய அம்மூன்று சொற்களும்
ஒட்டடை படிந்த ஜன்னல்களில் 
சாகாவரம் பெற்ற வௌவால்களாகித் தலைகீழாகத் தொங்குகின்றன.

(பி. கு:  தலைவரின் வௌவால்களுக்கு வாய் மட்டுமே உண்டு)

இன்னொரு கவிதையின் சொற்கள் சிலவற்றிலிருந்து அங்கே
சிம்மாசனத்தின் மீது புதிதாக இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பது
என்னைக் கிலி கொள்ளச் செய்கிறது.

எனக்கு உடனே போகவேண்டும்.
வௌவால்களோ என்னைச் சிறகுகளால்
அழுத்திப் பிடித்துக்கொண்டன.
மூன்றில் ஒரு வௌவால் சொன்னது
“தவறு தவறாக பிளேடினால் குஞ்சாமணி அறுக்கப்பட்டு தெருவில் எறியப்பட்ட கௌதம புத்தனின் இரத்தந்தான் அது”
என்று.
தெரியத் தேவையில்லாததைக் கேட்டு நான் சிரித்தேன் ஆழ் சயனத்திலிருக்கும் யாருக்கும்
தூக்கம் கலைந்துவிடுமளவு சத்தமாகச் சிரித்தேன்.
கவிதை முழுதும் படர்ந்திருந்த தலைவரின் வழுக்கையின் ஒளி
என்னை இழுத்து வெளியே எறிந்தது கோபத்தில்.


Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ / நான் / ஞானம் / குற்றம் / பசி என   நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல   பிடிக்க முடியாத காற்றும் நான் எனப்படுவது கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில் முப்பதாண்டுகளாக அலைந்து திரியும்   கூடு திரும்பாப் பறவையும் ஞானமென்பது   குற்றம் வழிந்தோடும் மற்றக் கண்ணும் குற்றத்தின் காயமே புதிய ஞானமும்   பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின் இசைக் குறிப்பும் என்பதாக பழஞ் சொற்களின் பரவசத்தில்   தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி ஆர்ப்பரிக்கிறது கவிதை