Skip to main content

நான் எனும் பேரின்பக் கவிதை

தன்னைக் கொண்டாடுதலின் பேரின்பம் பற்றி தனித்திருக்கும் இரவினால்
குறிப்புக்களெதுவும் எழுதப்படாது கழிந்துபோன
உலர்ந்த அதிகாலையொன்றில்
என்னை எழுதி வைத்திருக்கும் வரிகளை
மெல்ல அவிழ்க்கும் சூட்சுமத்தை
காதலாகிய நீ செய்யத் தொடங்குகிறாய்

குண்டு மணிகள் போல வரிகளுக்குள் உருண்டோடும்
நா ன் ஆகிய இரண்டெழுத்துக்களும்
கண்ணாடியில் ஒரேமுகத்தைக் காட்டியபடி வெகுநேரம் நிற்கின்றன.

அதுவோ
நிலைத்திருக்கமுடியாத நானெனும் வழமைக்கு மாற்றானது

நானென்பது  கண்ணாடியின் எழுத்துருக்களுக்குள்
அடைக்கவொண்ணாத பிரம்மாண்டம் ;
முடிவிலிகளின் ராட்சதம் என் பொருள்

எப்போதும் தனித்திருத்தலின் காதலன் நான்

ஆழமான நதியொன்றின்
அமைதியான சலனங்களையும் ஈரலிப்பையும்
ஒற்றை முத்தமென இட்டுவிடும் வரம் வாங்கி வந்த
தீராத இரவின் காதலன்

யசோதரா!
காதல் கிறங்கி வழியும் உன் விழித்திரவம் தொட்டு
என்னை இன்னொன்றாக வரைந்தனுப்பு

உன் பழைய காதலால் எப்போதோ நிறந்தீட்டப்பட்ட என் மேனி
அந்திப் பொழுதுகளில்
உறைந்துவிட்ட தேன்போல பிசுபிசுக்கிறது



Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது ...

வெள்ளை இரவு

மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ / நான் / ஞானம் / குற்றம் / பசி என   நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல   பிடிக்க முடியாத காற்றும் நான் எனப்படுவது கனவுகளின் இருள் சூழ்ந்த தெருக்களில் முப்பதாண்டுகளாக அலைந்து திரியும்   கூடு திரும்பாப் பறவையும் ஞானமென்பது   குற்றம் வழிந்தோடும் மற்றக் கண்ணும் குற்றத்தின் காயமே புதிய ஞானமும்   பசியெனப்படுவதோ தன் தெருப்பாடகனின் இசைக் குறிப்பும் என்பதாக பழஞ் சொற்களின் பரவசத்தில்   தன்னைத் தானே ஆலிங்கணம் செய்தபடி ஆர்ப்பரிக்கிறது கவிதை