Skip to main content

பனி, சொல் அல்லது தவம்



மங்கிய சிகப்பு இருளை அள்ளிப் பூசியிருக்கிற அறையின் சுவர் மடிப்புக்குள் 
யாருமற்றிருத்தலின் கவிதைகள் அட்டைகள் போல ஒட்டியிருக்கின்றன

எழுதிவிட நானிருப்பதாக நம்பி 
ஆயிரங்கவிதைகளுடன் விழத்தொடங்கியிருக்கிறது பனி,
இரவோ அதற்குள் போய் 
தன் ரகசியச் சொற்களை முட்டையிட்டு வைக்கிறது.

காவிகள் உறைந்த தேனீர்க் கோப்பை
பாதியளவும் சில பக்கங்களுமாக வாசிக்கப்பட்ட 
ஆறேழு புத்தகங்கள்,
உதிர்ந்த காகத்தின் இறகு கொண்ட இன்னொரு அப்பாவி நெடுங்கவிதை,
கழற்றிக் குவித்த அழுக்காடைகளென 
துண்டு துண்டெனச் சிதறிக்கிடக்கிற நான் முழுக்க பனியின் சொற்கள்.

பரவசத்தில் 
எழுதித் தீர்த்துவிடுதலின் வக்கிரமும் 
பின்னான கழிவிரக்கமுமாக அலைக்கழிக்கிற 
இருளின் வாசனையை நான் 
மேனி முழுதும் பூசிக் கொண்டு 
காதலியை உரக்க இசைக்கிறேன்.

எழுத்தெனப்படுவது விட்டு வெளியேறுதலின் இன்பம்;
இசையும்தான்

எழுதிவிடாதிருக்கும் வரம் வேண்டி 
இனி யாகம் இருக்க வேண்டும்

குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட கூந்தலுடன்
மடிமீது வந்தமரத்தகும் உன் நரைகள் பத்திரமா?

தவங் கலைக்கும் தனங்களும் நிர்வாணமும் 
 உன்னிலிருந்து நீங்கிற்றுதானே யசோதரா?

Comments

Popular posts from this blog

நபி

  யானைகள் சூழ வந்த பேரிடர் மீது சொண்டில் சுமந்திருந்த சாபத்தின் கூழாங்கற்களைப் போட்டு விடுகிறது சிட்டுக் குருவி வைக்கோல் நார்களென மொத்தமும்  தீப்பற்றியெரிந்தது கண்ட தன் குதூகலத்தை அதே சொண்டினால் காற்றின் மேல் எழுதுகிறது. அப்போது பாடிக்களிக்கும் காற்றுக்குள்ளிருந்து வெளியேறிய காதலனாகிய தெருப்பாடகன் தன் தோற்கருவி கொண்டு இந்தப் பேரண்டத்தின் பெரும் பரவசத்தைக் காற்றெங்கும் அதிரும்படி இசைக்கிறான். அபூதாலிபின் நரை முழுக்க பெருமிதத்தின் வண்ணங்கள் பூசும் அந்தச் செய்தி ஒரு மழை போல கவிதையையும் நனைக்கிறது "நபி பிறந்தார்" காலம் ஏங்கியிருந்த தூதின் முதற் சொல் ஒரு பூவென மலர நிலமெங்கும் குளிர்ந்த கஸ்தூரி வாசம்

யசோதராவெனப்படும் இரண்டு காதல் கவிதைகள்

கவிதை - 01 தொக்கி   நிற்கவென   இடப்படும்   மூன்று   புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத   கவிதையின் அர்த்தங்கள்   சிதறுகின்றன தன்   பற்றியெழுதப்படாத   கவிதையெனக்  கோபங்கொண்டு   பிடுங்கிய  தலைமயிரொன்றால்   என்னைக்   கட்டி வைக்கிறாள்   யசோதரா என்   மார்பின்   பூனை   ரோமங்கள்  மொத்தமும் பாம்பு   போல   அதனோடு   ஒட்டிப்   பிணைந்து  கொள்கின்றன பிறகு   வழக்கம்   போல   அவளை   அதே   பெயரறியாத   நாணமெனவும் நான்   என்பதை   பின்னாலிருந்து  அணைக்கும்   ராட்சதக்   காற்றெனவும்   இரவு   பெயரிட்டுக்   கொள்கிறது மூன்று   வெவ்வேறு   நிறைவுற்ற   புள்ளிகள்   அர்த்தங்களை   முடிவிலியென   அறிவிக்கும்  அபத்தமே கவிதையெனச்   சொல்லி விடுவதினின்றும்   தலைமயிரின்   சுகம்   இனிது நானெனப்படுவது   கவிதை ; கவிதையெனப்படுவது   உண்மையை  மறைப்பது ,  பின்   அதில்   சுகிப்பது . இரவின்   முடிவில்   ஒரு   பூ   வளையமெனத்   தன்னை  சுற்றியிருக்கச்   செய்து சத்தமாகப்   பாட்டிசைக்கிறது   நான் தூய   அர்த்தமாகிய   யசோதரா என்   இசையில்   மெல்லக்   கரைந்து   காற்ற

இருண்ட அந்தியொன்றின் கதை

© Fatheek Aboobucker அலங்கரிக்கப்படா வெறுஞ்சொற்களென நான் நிரம்பியிருக்கும் மட்பாத்திரம் தன் உட்சுவருக்குள் இந்தக் கரிய அந்தியின் வாசனையைப் பூசி வைக்கிறது எதிலிருந்தோ பிரிந்த ஒரு குறுந்தெரு என்னில் வந்து இணையுமாறு பெரும் பாதையென அகன்று விரிகிற நான் 'பயணமே தன் போய்ச்சேருமிடம்' என அந்த அந்திக்கான வாசனைக் குறிப்பை எழுதி முடிக்கிறது. அப்போது  சிதைவுற்ற சாளரங்களின் தழும்புகளுக்குள்  ஒளியெனப் பீறிடுகிறது  நின் அழியா நிறங்கொண்ட பெருஞ் சொல்